பூச்சோங், பிப்.18-
தண்டனையை அனுபவித்த பின்னர் வாழ்க்கையை மேம்படுத்த முனையும் இளைஞர்களுக்கு உதவும் மஞ்சள் ரிப்பன் திட்டத்தின் வழி 2019ஆம் ஆண்டில் 24,34 இளைஞர்கள் பயனடைந்தனர்.
திறனாற்றல், தொழில்முனைவு, சந்தை திறன் மற்றும் விழிப்புணர்வு ஆகிய துறைகளில் வாய்ப்புகளை வழங்க முன் வந்த தனியார் துறையின் ஒத்துழைப்புடன் அமைச்சு இந்த அடைவு நிலையைப் பதிவு செய்ய முடிந்ததாக இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் சயிட் சாடிக் சயிட் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
“தவறுகள் செய்த பின்னர் மீண்டும் வாழ்வைத் தொடங்க முற்படும் இளைய சமூகத்தினருக்கு உதவும் கடமை அரசாங்கத்திற்கு உண்டு என்பதால் மேலும் பல்வேறு வகையிலான உதவிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என்றார் அவர்.
“எனவே, கடந்த கால தவறுகளில் இருந்து விலகி சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக மாற விரும்பும் இந்த இளைஞர்களுக்கு உதவ மேலும் பல தனியார் நிறுவனங்கள் முன் வர வேண்டும்” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
சிறை மற்றும் சிறார் சீர்திருத்த பள்ளிகளில் இருந்து வெளியேறும் இளைஞர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் உள்துறை அமைச்சின் ஒத்துழைப்புடன் இளைனர் விளையாட்டு துறை அமைச்சு மஞ்சள் ரிப்பன் திட்டத்தை கடந்தாண்டு தொடங்கியது.