ஷா ஆலாம், மார்ச் 5-
சிலாங்கூர் அரசாங்க நிர்வாகத்தில் இருந்து பெர்சத்து கட்சி விலகியதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். கூட்டரசு அரசாங்க நிலையில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் மற்றும் மாநில நிலைத்தன்மை மற்றும் ஒற்றுமை தொடர்ந்து பேணப்பட வேண்டும் என்ற சிலாங்கூர் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாவின் வேண்டுகோளைத் தொடர்ந்து இவ்விவகாரம் கருத்தில் கொள்ளப்பட்டதாக அமிருடின் தெரிவித்தார்.
“இதன் பொருட்டு மாநில ஆட்சிக்குழு, ஊராட்சி மன்றம், கிராமத் தலைவர்கள் நல்லிணக்க மன்றம், மாநில அரசாங்க துணை நிறுவனம் மற்றும் இது சார்ந்த அனைத்து நிறுவனங்கள் ஆகியவற்றின் தலைமைத்துவ மற்றும் உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து பெர்சத்து இன்று விலகியது” என்று மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசினார்.
முன்னதாக அமிருடின் சிலாங்கூர் அமானா தலைவர் இஞ்சினியர் இஸாம் ஹாஷிம் மற்றும் சிலாங்கூர் ஜசெக தலைவர் கோபிந்த் சிங் டியோ ஆகியோரின் கூட்டு அறிக்கையை வாசித்தார்.