ஷா ஆலம், ஏப்.7-
கோவிட்-19 தொற்று பரவல் இன்னும் அபாயகரமான நிலையில் இருப்பதால் நடமாட்ட கட்டுப்பாடு ஆணை (பிகேபி) நீட்டிக்கப்பட வேண்டும் என்று தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினர் போர்ஹான் அமான் ஷா பரிந்துரை செய்தார்.
ஏப்ரல் 14ஆம் தேதி இந்த ஆணை முடிவுக்கு வந்தால், அதன் பாதிப்பில் இருக்கும் நபர்களின் மூலம் அது மீண்டும் பரவும் சாத்தியம் உண்டு என்று அவர் சொன்னார்.
“வைரஸ் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், நடமாட்ட கட்டுப்பாடு நீட்டிக்கப்படுவது அவசியமாகும். மாறாக, இந்த ஆணை மீட்டுக் கொள்ளப்பட்டால் பொது மக்கள் மீண்டும் பொது இடங்களில் நடமாடத் தொடங்கியவுடன் இந்தத் தொற்று மீண்டும் பரவத் தொடங்கக் கூடும்” என்று அவர் அச்சம் தெரிவித்தார்.
இந்தத் தொற்றில் இருந்து முழுமையாக விடுபட மக்கள் தொடர்ந்து வீட்டிலேயே இருப்பதுடன் தூய்மையைப் பேண வேண்டும் என்றார் அவர்.
சிப்பாங்கில் தொற்று உறுதிப்படுத்தப் பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 49ஐ எட்டியதை அடுத்து கோவிட்-19 தடுப்பு பிரிவினர் அத்தொகுதியை சிவப்பு வட்டாரமாகப் பிரகடணம் செய்தனர்.