ஷா ஆலம், ஏப்.15-
கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் தண்ணீர் விநியோகம் தடைப்படுள்ளதாக பல புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் அதற்கு குழாய்கள் உடைந்த சம்பவங்களே காரணம் என்று ஆயர் சிலாங்கூரின் தொடர்பு பிரிவுத் தலைவர் அப்துல் ஹாலிம் மாட் சோம் கூறினார். இந்தப் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் நடமாட்ட கட்டுப்பாடு காலக் கட்டத்தில் பயனீட்டாளர்களுக்கு தண்ணீர் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்யப்படுவது அவசியம் என்றார் அவர்.
புகார் கிடைக்கப்பெற்றவுடன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு குத்தகையாளர் மற்றும் தொழிலாளர்கள் சென்று நிலைமையைப் பார்வையிட்ட பின்னர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று அவர் சொன்னார்.
ஆயர் சிலாங்கூர் நெருக்கடி பிரிவு தொடர்ந்து செயல்பட்டு வருவதால் பயனீட்டாளர்கள் கவலை அடையத் தேவை இல்லை என்று அப்துல் ஹாலிம் தெரிவித்தார். நடமாட்ட கட்டுப்பாடு காலக் கட்டத்தில் தண்ணீர் பயன்பாடு அதிகரித்துள்ளதா என்பது பிகேபி முடிவுற்ற பின்னர் நடைபெறும் மீட்டர் வாசிப்புக்கு பின்னரே தெரிய வரும் என்றார் அவர்.