ஷா ஆலம், ஏப்.15-
நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் மூன்றாம் கட்டம் இன்று தொடங்கியதைத் தொடர்ந்து ஏழு சாலைத் தடுப்புகள் மூலம் உலு சிலாங்கூரில் போலீஸ் தனது அமலாக்க நடவடிக்கைகளை அங்கு அதிகரித்துள்ளது.
தஞ்சோங் மாலிம், லெம்பா பெரிங்கின், சுங்கை புவாயா, புக்கிட் தாகார் மற்றும் புக்கிட் பெருந்தோங் ஆகிய டோல் சாவடிகளில் 24 மணி நேர சாலைத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் படைத் தலைவர் சூப்பிரிடெண்டன் அர்ஷாட் கமாருடின் கூறினார்.
உலு யாம் – சுங்கை துவா 4ஆவது மைல் மற்றும் ஜாலான் ஈப்போ – கோலாலம்பூர் 34ஆவது மைல் ஆகிய இரு இடங்களிலும் சாலைத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அவர்.
“இவைத் தவிர்த்து புக்கிட் பெரிந்தோங்கில் உள்ள ஜாலான் உத்தாமா பெர்சியாரான் கெம்போஜா, ஜாலான் கெம்போஜா 4ஏ, ஜாலான் செரோஜா 3ஏ மற்றும் ஜாலான் கஸ்தூரி ஆகிய 5 சாலைகளும் மூடப்பட்டுள்ளன” என்றார்.
இவற்றுக்குப் பதிலாக ஜாலான் உத்தாமா லிங்காரான் கெம்போஜா, தாமான் கெம்போஜா மற்றும் தாமான் செரோஜாவில் உள்ள ஜாலான் உத்தாமா செரோஜா ஆகிய மாற்று வழிகளை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மேல் விவரம் அறிய விரும்புபோர் உலு சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்துடன் 03-60641222 என்ற எண்ணில் எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்.