ஷா ஆலம், ஏப்.23-
பலாக்கோங் தொகுதி வாழ் மக்களுக்கு ஓராயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட்-19 எதிர்ப்பு சாதனங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன என்று அதன் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியுவ் கி கூறினார். சுவாச கவசம், திரவ சவர்க்காரம், கையுறை மற்றும் சுற்றறிக்கை ஆகியவை உள்ளடங்கிய இந்த சாதனப் பொட்டலங்கள் பொது மக்களின் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைக்கு உதவியாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இத்தொகுதியில் உள்ள 42,750 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு மொத்தம் 171,000 சுவாச கவசங்களை வழங்கியது என்றார் அவர். முதல் கட்டமாக புதுக் கிராமம் மற்றும் பாரம்பரிய கிராமங்களுக்கு இவை பகிர்ந்தளிக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டன என்று சிலாங்கூர்கினியிடம் அவர் தெரிவித்தார்.
இந்த கோவிட்-19 தொற்று தடுப்பு சாதனங்களை இன்னும் பெறாத சுமார் 3,000 உள்ளூர் வாசிகளுக்கு தனது தரப்பு பகிர்ந்தளிக்கும் என்றார் அவர்.