கோலா லம்பூர், மே 1:
வங்கிக்கடனை திருப்பிச் செலுத்துவதில் ஆறு மாத தாமதமாக கட்டுவதைத் தொடர்ந்து விதிக்கப்படும் வட்டியை அல்லது இலாபத்தை தள்ளுபடி செய்ய வங்கிகள் பரிசீலிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் கேட்டுக்கொண்டார்.
“வங்கிகள் வட்டிகளை தள்ளுபடி செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. மக்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து, அனைத்து நிதி நிறுவனங்களையும், குறிப்பாக மொராட்டோரியம் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், விதிக்கப்படும் வட்டியை அல்லது இலாபத்தை இந்த ஆறு மாத தாமதகாலப்பகுதியில் தள்ளுபடி செய்யுமாறு பரிந்துரைக்க விரும்புகிறேன்” என்று அவர் இன்று தமது அகப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
“மக்களின் தேவைகளின் அடிப்படையில், சரியான முடிவுகளை எடுக்க நிதி அமைச்சு, பேங்க் நெகாரா மலேசியா மற்றும் வங்கிகளுடன் ஒத்துழைக்க தயாராக உள்ளது” என்றார்.
ஏப்ரல் 30ம் தேதி, பேங்க் நெகாரா மலேசியா, ஆறு மாத தாமதகாலப்பகுதியில் (மொராட்டோரியம் திட்டம்), வாடகை கொள்முதல் கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டியும் அல்லது நிலையான இஸ்லாமிய நிதிக் கடன்களுக்கு விதிக்கப்படும் இலாபமும் தொடர்ந்து விதிக்கப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.