கோலா லம்பூர், மே 9:
மாநிலம் விட்டு மாநில எல்லை கடந்த பயணம் செய்யும் போது, பயணத்திட்டத்தைப் பின்பற்றத் தவறியவர்கள் திரும்பி அனுப்பப்படுவார்கள் என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர் முகமட் கூறினார்.
“கால அட்டவணையை பின்பற்றாதவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். பின்பற்றத் தவறியவர்களுக்கு தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (பாதிக்கப்பட்ட உள்ளூர் பகுதிகளில் நடவடிக்கைகள்) (எண் 5) 2020க்கு உட்பட்டு, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் RM1,000 அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் பெற நேரிடும்,” என்று அவர் கூறினார்.
நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபிபி) கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக, நாடு முழுவதும் 98 சாலைத் தடைகளை காவல்துறையினர் மேற்கொள்வார்கள் என்று அவர் கூறினார். மே 7 முதல் 10 வரை பொதுமக்கள் மாநிலம் கடந்த பயணம் செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள்.காவல்துறையின் கால அட்டவணையின்படி, மே 7, வியாழக்கிழமை கோலாலம்பூரிலிருந்து திரும்பும் பயணமும், மே 8, வெள்ளிக்கிழமை அன்று பேராக், ஜொகூர் மற்றும் கிளந்தானில் இருந்து திரும்பும் பயணமும் மேற்கொள்ளப்படும்.
சனிக்கிழமை பயணங்களில் பெர்லிஸ், கெடா, பினாங்கு, மலாக்கா மற்றும் பகாங்கிலிருந்து திரும்பும் பயணங்கள் அடங்கும். ஞாயிற்றுக்கிழமை பயணங்களில் சிலாங்கூர், நெகேரி செம்பிலன் மற்றும் திரங்கானு ஆகிய இடங்களிலிருந்து திரும்பும் பயணங்களும் அடங்கும். கெராக் மலேசியா விண்ணப்பத்தின் மூலம் மொத்தம் 143,516 பயண விண்ணப்பங்களுக்கு போலீசார் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது.