செகிஞ்சான், மே 13:
கோவிட் -19 தொற்றுநோயைத் தடுக்க சமூகஇடைவெளி, முகமூடி அணிவது, சோப்பு அல்லது கிருமிநாசினி திரவங்களால் கைகளை தவறாமல் கழுவ வேண்டும் என்று செகிஞ்சன் பொதுச் சந்தைக்கு வருபவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என எங் சுவி லிம் தெரிவித்தார். வெளியேறத் தேவையில்லாதவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக செகிஞ்சன் மாநில சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில சட்டசபை சபாநாயகருமான எங் சுவி லிம் கூறினார்.
” எதையாவது வாங்குவதைத் தவிர வேறு தேவையில்லை என்றால் வீட்டில் இருக்கும் படி பொதுமக்களின் ஒத்துழைப்பை நான் கேட்டுக்கொள்கிறேன். ஒரே ஒரு வாகனத்தில் நான்கு பேருக்கு இப்போது அனுமதி என்றாலும் ஒருவரை மட்டுமே வெளியே செல்ல பரிந்துரைக்கிறேன்” என்று அவர் இன்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார். மேலும், குறிப்பாக செகிஞ்சன் பொதுச் சந்தையில் கோவிட் -19 வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று சுவி லிம் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
கோவிட் -19 வைரஸ் நோய் பாதிக்கப்பட்ட வர்த்தகரால் சந்தை மூடப்பட்டதா? இல்லையா? என்பதைப் பற்றி கருத்து தெரிவித்த சுவி லிம், சுகாதார அமைச்சில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் இது வரை இல்லை என்று கூறினார். ” இங்கு எல்லாமே நல்ல நிலையில் உள்ளது. சபாக் பெர்னம் மாவட்ட மன்றத்தின் (எம்டிஎஸ்பி) மேற்பார்வையின் கீழ் பொதுச் சந்தை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பொது மக்கள் மற்றும் வர்த்தகர்கள் அனைவரும் உடல் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தினசரி அடிப்படையில் கண்காணிக்கப்படுவார்கள்,” என்று அவர் கூறினார்.