ஷா ஆலம், மே 21:
சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் இன்று 12 மணி வரை எட்டாக குறைந்துள்ளதாக சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பு பணிக்குழு (எஸ்திஎப்சி) தெரிவித்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 15 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது வரையில் சிலாங்கூர் மாநிலத்தில் மொத்தம் 1,673 கோவிட்-19 நோய் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று எஸ்திஎப்சி தனது டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, எஸ்திஎப்சி தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் சில தரப்பினரை செயலைக் கண்டு வேதனை அடைவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. இது ஒரு பொறுப்பற்ற செயல் என அது வர்ணித்துள்ளது. சுகாதார அமைச்சு இன்று மொத்தம் 50 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அதன் இயக்குநர் நூர் ஹிஸாம் தெரிவித்துள்ளார். மலேசியாவில் இது வரையில் மொத்தம் 7,059 கோவிட்-19 நோய் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.