புத்ராஜெயா, மே 21:
இந்த ஆண்டின் நோன்பு பெருநாள் காலத்தில் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு சாலைகளில் பயணிக்க தடை ஏதும் இல்லை என்று போக்குவரத்து அமைச்சு இன்று அறிவித்துள்ளது. கோவிட்-19 நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபிபி) கடைபிடிப்பது ஒரு புறம் இருந்தாலும் பொருளாதார கோணத்தில் இதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென அந்த அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
மலேசியாவில் பெருநாள் காலங்களில் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு தடை விதிப்பது சகஜம். இதற்கு காரணம், பெருநாள் காலத்தில் சொந்த ஊர்களுக்கு திரும்பும் வாகனமோட்டிகளின் பாதுகாப்பு கருதி இது நடப்பில் இருந்து வந்தது. இருந்தாலும், பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் பிகேபிபி நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சு நினைவூட்டியுள்ளது.