புத்ராஜெயா, ஜூன் 4:
நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) அமல்படுத்திய மலேசியா இந்த வட்டாரத்தில் கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தை கட்டுப்படுத்திய முதல் நாடாக விளங்குகிறது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா தெரிவித்தார். தொற்று நோய் கண்ட நோயாளிகளை தனிமைப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டில் இருந்து திரும்பிய மலேசியர்களை தனிமைப்படுத்தும் மையத்திற்கு கொண்டு சென்ற நடவடிக்கைகள் நோய் பரவலை தடுக்க உதவியது என்று அவர் விவரித்தார்.
” வெளிநாட்டில் இருந்து திரும்பிய மலேசியர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திய நடவடிக்கை வெளிநாட்டு நோய் பரவலை தடுத்தது. வெளிநாடுகளில் நோயாளிகளை வீடுகளில் தனிமைப்படுத்தினார்கள். ஆனாலும், மலேசியாவில் நோயாளிகளை மருத்துவமனையிலே தனிமைப்படுத்தி வைத்தோம்,” என்று பெரித்தா ஹாரியான் தகவல் வெளியிட்டுள்ளது.
மலேசியா கடந்த ஜனவரியில் ஹுஹான் பகுதியில் கோவிட்-19 வைரஸ் நோய் பரவி வருவதைத் தொடர்ந்து, நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியது என நூர் ஹிஸாம் கூறினார்.