புத்ராஜெயா, ஜூன் 10:
பொதுத் தேர்வு வகுப்பு மாணவர்களுக்கு (படிவம் ஐந்து மற்றும் படிவம் ஆறு) ஜூன் 24- ஆம் தேதி முதல் பள்ளி அமர்வு தொடங்கும் என்று கல்வி அமைச்சர் முகமட் ராட்ஸி முகமட் ஜிடின் தெரிவித்தார். சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்கெஎன்) ஆகியவற்றின் ஆலோசனையைப் பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார். இதனிடையே, பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் உணவுகளை தயாரித்து கொடுக்கும்படி முகமட் ராட்ஸி கேட்டுக் கொண்டார்.
“பொதுத் தேர்வு மாணவர்களான, எஸ்பிஎம், எஸ்விஎம், எஸ்டிபிஎம், எஸ்டிஏஎம் மற்றும் அனைத்துலக தேர்வு ஆகியவற்றுக்கான தொடக்க நாள் ஜூன் 24 புதன்கிழமை என்று கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. ” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற சிறப்பு ஊடக கூட்டத்தில்இவ்வாறு கூறினார்.
முன்னதாக, இன்று தொடங்கும் மீட்பு நிலை நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) காலகட்டத்தில், பள்ளிகள் மீண்டும் கட்டம் கட்டமாக திறக்கப்படும் என்று பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்திருந்தார்.