புத்ராஜெயா, ஜூன் 17:
இந்த ஆண்டு மே முதல் தேதி தொடங்கி நேற்று வரையில் நடத்தப்பட்ட ஓப்ஸ் பெந்தேங் கொவிட்-19 சோதனை நடவடிக்கையில், 850 சட்டவிரோத குடியேறிகளும், அவர்களை நாட்டிற்குள் அழைத்து வந்த 153 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், நாட்டின் எல்லைப் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கு முயன்ற 18 வெளிநாட்டு கப்பல்களும், கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் 12 பேரும், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோ தெரிவித்தார்.
இதனிடையே, கடந்த திங்கட்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் பெந்தேங் நடவடிக்கையின் மூலம் நடத்தப்பட்ட சாலைத் தடுப்பு நடவடிக்கையில், 40,880 வாகனங்கள் சோதனைச் செய்யப்பட்டதோடு, குடிநுழைவு தொடர்பிலான குற்றத்தைப் புரிந்த 10 அந்நிய நாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் எல்லைப் பகுதிகளில், அமலாக்க நிறுவனம் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு, சட்டவிரோதமான முறையில் எல்லைக்குள் நுழைய முயற்சிக்கும் தரப்பினருக்கு எதிராக அரசாங்கமும் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் இஸ்மாயில் சப்ரி எச்சரித்திருக்கிறார்.
— பெர்னாமா