புத்ராஜெயா, ஜூன் 22:
நாட்டின் அனைத்துலக எல்லையை, நிபந்தனைகளுக்கு உட்பட்டு மீண்டும் திறப்பதற்கு சுகாதார அமைச்சு, பச்சை மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஆறு நாடுகளை அடையாளம் கண்டிருக்கிறது.
இருப்பினும் அது இன்னும் ஆலோசனை நிலையில் இருப்பதாகவும் அது குறித்து எந்தவொரு இறுதி முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று சுகாதார தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில் கொவிட்19 பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில், சம்பந்தபட்டிருக்கும் நாடுகளுக்கிடையே அமல்படுத்தப்படும் கொள்கைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து முதலில் ஆராயப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
அவை அனைத்தும் ஒரே நிலையில் இருந்தால், குறிப்பிட்ட நாடுகளுடன் இணக்கம் காணப்படலாம் என்றும் அவர் கோடி காட்டி இருக்கின்றார்.
நடப்பில் இருக்கும் மீட்புநிலை நடமாட்டு கட்டுப்பாட்டு கால கட்டத்திலோ அல்லது அது நிறைவடைந்த பின்னரோ ஆகஸ்டு மாதம் இறுதியில் எல்லைகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்றும் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.