ஷா ஆலம், ஜூன் 29:
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியின் நிர்வாகத் திறனை அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி பாராட்டினார். மக்கள் நல்வாழ்வு பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் சிறந்த தலைமைத்துவத்தை மாநிலம் பெற்றுள்ளதாக முன்னாள் சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான அஸ்மின் அலி பெருமிதம் கொண்டதாக தி ஸ்தார் செய்தி வெளியிட்டுள்ளது.
“”சிலாங்கூர் மாநிலம் மத்திய அரசாங்கத்திற்கு மிக முக்கியமான மாநிலம் ஆகும். நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 23% சிலாங்கூர் மாநிலம் பங்கு வகிக்கிறது. ஆகவே, நாம் இந்த நிலையை பாதிக்கும் வகையில் எதுவும் செய்யக்கூடாது. மத்திய அரசாங்கத்தை நான் பிரதிநிதித்தாலும் சிலாங்கூர் மாநிலம் எனது உள்ளத்தில் என்றும் இருக்கும். அமிருடின் தலைமையில் சிலாங்கூர் மாநிலம் சிறந்த ஒரு குழுவை கொண்டுள்ளதை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று சிலாங்கூர் மாநில மேம்பாட்டு நடவடிக்கை மன்றக் கூட்டத்திற்கு தலைமை ஏற்ற பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு அஸ்மின் அலி கூறினார். இக்கூட்டத்தில் அமிருடின் ஷாரியும் கலந்து கொண்டார்.