ஷா ஆலம், ஜூன் 29:
கோவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து நாட்டை புத்துயிர் பெறும் முயற்சியில் எதிர்க்கட்சிகளின் கீழ் கூட அனைத்து மாநிலங்களுக்கும் நியாயமாக நடந்துக் கொள்ளும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை மூத்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தில் அரசியல் கருத்தியல் வேறுபாடு எதுவும் இல்லை, ஏனெனில் இது குறிப்பாக கோவிட் -19 க்கு பிந்தைய காலத்தில் திட்டமிடப்பட்ட ஒன்றாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“நாங்கள் அரசியலை ஒதுக்கி வைத்திருக்கிறோம், நடமாடும் கட்டுபாடு ஆணை (பிகேபி) மற்றும் கோவிட் -19 எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசும் மாநில அரசும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. எங்களுக்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒத்துழைப்பது மிகவும் முக்கியம்,” என்று அவர் இன்று இங்குள்ள சிலாங்கூர் மாநில மேம்பாட்டு நடவடிக்கை மன்றக் (எம்டிபிஎன்ஜி) கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் கலந்து கொண்டார். கூட்டத்தில், சிலாங்கூர் எம்டிபிஎன்ஜியின் தலைவரான முகமட் அஸ்மின், முன்னர் அங்கீகரிக்கப்பட்ட சில உள்கட்டமைப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்படும் என்று ஒப்புக் கொண்டதாகக் கூறினார். உள்கட்டமைப்பு திட்டம் மாநில மற்றும் தேசிய பொருளாதார வளர்ச்சியில் பெருக்க விளைவை ஏற்படுத்துவதால் இந்த நடவடிக்கை அவசியம் என்று அவர் கூறினார். மேலும், சிலாங்கூரில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஆதரிக்க உள்கட்டமைப்பு தேவைகள் குறித்தும் இந்த சந்திப்பு கவனம் செலுத்தியது என்றார்.