புத்ராஜெயா, ஜூலை 5:
மீட்புநிலை நடமாடும் கட்டுப்பாட்டு ஆணையை (பிகேபிபி) மீறிய குற்றத்திற்காக போலீசார் 165 பேரை கைது செய்திருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார். அதில் 14 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் 151 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். 96 மனமகிழ்வு அல்லது இரவு கேளிக்கை மைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் செயல்பாட்டு தர விதிமுறையை பின்பற்றாமல் அதிகமானோர் அவ்விடத்திற்கு வந்த குற்றத்திற்காகவும் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக இஸ்மாயில் சப்ரி குறிப்பிட்டார்.
நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு தர விதிமுறையை பின்பற்றப்படுவதை உறுதி செய்யப்படுவது தொடர்பில், நேற்று, சனிக்கிழமை போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சோதனையிடப்பட்டதாக அவர் கூறினார். 3,786 பேரங்காடிகள், 5,498 உணவகங்கள், 1,733 வியாபார தளங்கள், 3 ,569 வங்கிகள் மற்றும் 741 அரசாங்க அலுவலகங்களில் 12 ,789 அதிகாரிகளை உட்படுத்தி 2,745 கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேவேளையில், 1, 204 தரை போக்குவரத்து முனையங்களிலும், 259 நீர் போக்குவரத்து முனையங்களிலும், 88 வான் போக்குவரத்து முனையங்களிலும் பணிக்குழு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.
–பெர்னாமா