அம்பாங்,செப் 21- தங்கள் வர்த்தகத்தை இலக்கவியல் மயமாக்கும் நடவடிக்கையில் வணிகர்கள் இப்போதே ஈடுபட வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார். ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் கழித்து இலக்கவியலை கற்றுக் கொள்ளலாம் என்ற மனப்போக்கை அவர்கள் கைவிட வேண்டும் என்றும் அவர் கூறினார். வணிகர்கள் தங்கள் வர்த்தகத்தை் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக கொள்வதற்கு வியூகங்களை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தை அபரித தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார். விவேக தொழில் நுட்பம் மற்றும் இயங்கலை வாயிலான வியாபார யுகத்தை நோக்கி பயணம் செய்கிறோம். இந்த மாற்றத்திற்கு தயாராகாவிட்டால் நாம் பின் தங்கியவர்கள் ஆகிவிடுவோம் என்றார் அவர். இங்குள்ள அம்பாங் நகராண்மைக் கழகம் அரங்கில் நடைபெற்ற சிலாங்கூர் இலக்க- வியல் தொழில் முனைவோர் திட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்- களிடம் அவர் இதனைக் கூறினர். கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை ஷோப்பி நிறுவனத்துடன் கூட்டாக மேற்கொள்ளப்பட்ட சிலாங்கூர் இ-பாசார் திட்டத்தின் மூலம் 34.1 கோடி வெள்ளி வருமானம் ஈட்டப்பட்டதாக கூறிய அவர், இத்திட்டத்தில் பங்கேற்ற 8,400 பேரில் 6,400 பேர் புதிதாக மின்னியல் வர்த்தக துறையில் நுழைந்தவர்கள் என்றார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2020/09/PSX_20200919_180111-960x640.jpg)