NATIONAL

அரசாங்கத்தை அமைக்க போதுமான ஆதரவு டத்தோ ஸ்ரீ அன்வார் அதிரடி அறிவிப்பு

கோலாலம்பூர், செப் 23-  அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவைப்படும் வலுவான மற்றும் நம்பிக்கையூட்டும் ஆதரவை  நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தாம் பெற்றுள்ளதாக அக்கூட்டணியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் இன்று பிற்பகல் நடத்திய திடீர் செய்தியாளர் சந்திப்பில் அன்வார் இந்த தகவலை வெளியிட்டார்.

எங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. நான்கு அல்ல, ஐந்து அல்லது ஆறும் அல்ல என்று ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து சூசகமாக குறிப்பிட்ட அவர், எனினும் உண்மையான எண்ணிக்கையை கூற மறுத்து விட்டார்.

இந்த மாற்றத்தை தொடர்ந்து டான்ஸ்ரீ மொகிடின் யாசின் அரசாங்கத்தால் இனியும் தாக்கு பிடிக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மாட்சிமை தங்கிய பேரரசரை சந்திப்பதற்கு ஏதுவாக வலுவான மற்றும் நம்பிக்கையூட்டும் அளவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நான் பெற்றிருக்கிறேன்.

என்னை ஆதரிப்பவர்களில் பெரும்பாலானோர் மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன் என்றார் அவர்.

பேரரசரை சந்திப்பதற்கு நேற்று தமக்கு நேரம் ஒதுக்கப்பட்டதாகவும் எனினும், அவர் தேசிய இருதய சிகிச்சை கழகத்தில் சிகிச்சை பெற்று வருவதால் அந்த சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டதாகவும் அன்வார் சொன்னார்.

 


Pengarang :