ஷா ஆலம், அக் 30- இன்று தொடங்கும் சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்கும் 1,016 பேருக்கும் கோவிட்-19 நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கோவிட்-19 நோய்த் தொற்று சோதனையில் அவர்கள் அனைவரும் அந்நோயினால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சுய் லிம் கூறினார்.
சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்கும் அனைவருக்கும் நோய்த் தொற்று இல்லை என்ற மகிழ்ச்சியான செய்தி நமக்கு கிடைத்துள்ளது. இதன் வழி கூட்டத் தொடரை நாம் சுமூகமான முறையில் நடத்த முடியும் என்றார் அவர்.
சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு கடந்த 25 மற்றும் 26ஆம் தேதிகளில் கோவிட்-19 சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவிட் பெருந்தொற்று அதிகரிப்பு காரணமாக சிலாங்கூரில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு மாநில அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டது.