பந்திங், ஜன 3– ஸ்ரீ ஜூக்ரா கிராம சமூக நிர்வாக மன்றத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 60 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
சுமார் 100 வெள்ளி மதிப்பிலான இந்த உணவுப் பொருள்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டதாக மோரிப் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் பஹாருடின் கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்று மற்றும் அதன் காரணமாக அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.
சமூக நிர்வாக மன்றத்தின் நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக மேற்கொள்ளப்படும் இத்திட்டம் கோவிட்-19 நோய்த் தொற்று பரவத் தொடங்கியது முதல் அமல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
சிரமத்தில் இருப்போருக்கு குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் பி40 பிரிவினருக்கு உதவுவதில் எங்களுக்கு உள்ள கடப்பாட்டை நிரூபிக்கும் வகையில் எங்களின் இந்த உதவித் திட்டம் அமைகிறது என்றார் அவர்.
ஸ்ரீ ஜூக்ரா பாலாய் ராயாவில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு புற நகர் மற்றும் பாரம்பரிய கிராம மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினரும் தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினருமான புர்ஹான் அமான் தலைமை தாங்கினார்.