கிள்ளான், ஜன 14– இயற்கை அன்னையின் ஆசியுடன் இன்னல்களைக் கடக்கும் நன்னாளாக பொங்கல் திருநாள் விளங்குவதாக சொந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
உழைப்பையே உயிராய் மதிக்கும் உழவர்களுக்கு உற்றத் துணையாய் இருக்கும் இயற்கை அன்னை, உலகிலுள்ள மற்ற உயிர்களையும் நோய் நொடியிலிருந்து காப்பதில் துணையாய் இருக்க பிரார்த்திப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த யுகத்தைக் கடந்திட ஆண்டவன் அருளையும் இயற்கையின் ஆசியையும் பெறும் நன்னாளாக நம் முன்னோர்கள் சூரியனை வழிபட்டு வந்தார்கள். அதனைப் பின்பற்றி நாமும் நம் குடும்பம் தழைக்க இறைவனையும் இயற்கை அன்னையையும் வணங்குவோம் என்றார் அவர்.
நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக நாம் அனைவரும் கூடல் இடைவெளி உள்பட நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றி நடக்க வேண்டும்.
இந்த வேளையில் நாம் அனைவருக்கும் உள்ள முக்கியப் பொறுப்பு நாம் நேசிக்கும் அனைத்து உயிர்களையும் வெற்றிகரமாக அடுத்த இலக்கு நோக்கி அழைத்துச் செல்வதாகும். இந்த இனிய தருணத்தில் எனது பொங்கல் வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறினார்.