ஷா அலாம் 16- சில்லரை வியாபாரம் உள்பட பொருளாதார நடவடிக்கைகள் மறுபடியும் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் செலங்கா செயலியை பயன்படுத்தும்படி பொதுமக்களை தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கேட்டுக் கொண்டார். சிலாங்கூர் மாநில அரசினால் உருவாக்கப்பட்ட இந்த செயலி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலகட்டத்தில் பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு ஏதுவாக தற்போது தரம் உயர்த்தப்பட்டு பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் திறக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். அதேசமயம் பொது இடங்களுக்கு செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்களையும் வலியுறுத்த விரும்புகிறோம். கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களை அடையாளம் காண்பதில் இந்த செலங்கா செயலி முன்களப் பணியாளர்களுக்கு பெரிதும் துணை புரியும் என்று அவர் தெரிவித்தார். இந்த நோய்த் தொற்று மறுபடியும் தீவிரமடைவதை தடுப்பதற்கு ஏதுவாக பொதுமக்கள் எந்நேரமும் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை நாம் முறையாக கடைபிடிக்காவிட்டால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நோய்த் தொற்று தீவிரமடையும். இதனால் உடலாரோக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் கடுமையான விளைவுகள் உண்டாகும் என அவர் எச்சரித்தார். செலங்கா செயலி தற்போது தரம் உயர்த்தப்பட்டு இரட்டை ஸ்கேன் முறை, ஜி.பி.எஸ். சார்ந்த சோதனை உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2020/12/SElang-960x489.jpg)