கோலாலம்பூர், பிப் 16- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் பத்து கிலோ மீட்டர் சுற்றுவட்டத்திற்கு அப்பாலும் பொதுமக்கள் பயணிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும், மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடப்பதற்கான தடை இன்னும் நீடிக்கிறது.
வர்த்த நடவடிக்கைகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுவதை கருத்தில் கொண்டு இந்த விதிமுறை தளர்வு அறிவிக்கப்படுவதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
அதிகமான வர்த்தக நடவடிக்கைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதைக் கருத்தில் கொள்கையில் பத்து கிலோமீட்டருக்கு அப்பால் பயணிக்க அனுமதி மறுப்பது சிறிதும் பொருத்தமற்றதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும், மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடப்பதற்கு விதிக்கப்பட்ட தடை இன்னும் அமலில் உள்ளதாக இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்ட மாநிலங்களில் இந்த பத்து கிலோ மீட்டருக்கு அப்பாலும் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படுகிறது.