கோலாலம்பூர், மார்ச் 22– எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) ஆணையரை இன்று புத்ரா ஜெயாவில் சந்திக்கிறார்.
டத்தோஸ்ரீ அன்வார் மற்றும் டத்தோஸ்ரீ அஸாம் பாக்கியுடனான சந்திப்பு இன்று மாலை 3.00 மணிக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிக்காத்தான் நேஷனல் (தேசிய கூட்டணி) அரசாங்கத்திற்கு ஆதரவு திரட்டுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் வழங்கப்படுவதாக எழுந்துள்ள புகார் தொடர்பில் விவாதிக்கும் பொருட்டு இந்த சந்திப்பு நடத்தப்படுவதாக அறியப்படுகிறது.
ஊழலும் அதிகாரத் துஷ்பிரயோகமும் முழுமையாக துடைத்தொழிக்கப்பட வேண்டிய கடுமையான பிரச்னைகளாக தாம் கருதுவதாக கெடிலான் கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
இப்பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூகத்தின் அனைத்து நிலையிலான மக்களின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது என்று நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களைச் அச்சுறுத்துவதற்கு எம்.ஏ.சி.சி. உள்பட அரசாங்கம் நிறுவனங்களும் பயன்படுத்தப்படுவதாக கெஅடிலான் கட்சி இதற்கு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தது.