SELANGORYB ACTIVITIES

அம்பாங், கோம்பாக் தொகுதிகளில் வலுவான வேட்பாளர்களை சிலாங்கூர் கெஅடிலான் தேர்வு செய்யும்

கோலலங்காட், மார்ச் 22– வரும் 15வது பொதுத்தேர்தலில் அம்பாங் மற்றும் கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதிகளில் வலுவான வேட்பாளர்களை சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சி நிறுத்தும்.

இத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு நியாயமான முறையில் நடத்தப்படும் என்று மாநில கெஅடிலான் நிர்வாக மன்றத் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அவ்விரு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அவற்றுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலும் நிச்சயம் மாறுதல் இருக்கும். உத்வேகம் கொண்ட புது முகங்களை அங்கு நிறுத்தவிருக்கிறோம். எனினும்,  அவர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் சொன்னார்.

கெஅடிலான் கட்சி இவ்வளவு நாட்களாக இளம் வேட்பாளர்களை தேர்தல்களில் களமிறக்கி வந்துள்ளது. கட்சியின் நியாயமான ஒருங்கிணைப்பு வியூகத்தை அமல்படுத்த விரும்புகிறோம் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசாருமான அவர் தெரிவித்தார்.

கட்சியைப் பொறுத்தவரை வேட்பாளர்கள் பற்றிய விவகாரங்கள் தற்போதைக்கு முக்கியமில்லை எனக் கூறிய அவர், ஒவ்வொரு தொகுதியிலும் கட்சி இயந்திரத்தை வலுப்படுத்துவதே தற்போதைய தலையாய பணியாகும் என்றார்.

களப்பணியாற்றுவது தொடர்பான விவகாரங்ளுக்கு தீர்வு காணவும் துரோகத்தால் பறிக்கப்பட்ட அதிகாரத்தை மீட்டெடுக்கவும் மாநிலம் முழுமைக்குமான பயணத்தை தாம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :