கோலாலம்பூர், ஏப் 27– நோன்பு பெருநாளின் முதல் வாரத்தில் தேசிய இரத்த மையத்தில் இரத்த கையிருப்பு 59 விழுக்காடாக உள்ள வேளையில் புத்ரா ஜெயா, புஸ்பானிதாபுரி இரத்த தான மையத்தில் அதன் அளவு 32.8 விழுக்காடாக மட்டுமே உள்ளது.
இந்த இரத்த கையிருப்பு அளவு கவலையளிக்கும் வகையில் உள்ளது. காரணம், உயிர்களைக் காப்பாற்ற ஒவ்வொரு 43 வினாடிக்கும் ஒரு பை இரத்தம் தேவைப்படுகிறது.
நோயாளிகளைக் காப்பாற்றும் அளவுக்கு போதுமான இரத்தக் கையிருப்பைக் கொண்டிருப்பதற்கு தினசரி 500 முதல் 600 இரத்த தானம் செய்வோர் தேவைப்படுவதாக தேசிய இரத்த மையம் அறிக்கை ஒன்றில் கூறியது.
விபத்தில் சிக்கியவர்கள் இரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்வோருக்கு செலுத்தும் அளவுக்கு போதுமான அளவு இரத்தம் கையிருப்பை எந்நேரமும் கொண்டிருக்க வேண்டிய கடப்பாட்டை தேசிய இரத்த மையம் கொண்டிருப்பதாகவும் அது தெரிவித்தது.
இரத்தப் பற்றாக்குயை போக்குவதில் உதவ நடமாடும் இரத்ததான முகாமுக்கு ஏற்பாடு செய்யும்படி பொது அமைப்புகளை தேசிய இரத்த மையம் கேட்டுக் கொண்டது.
இரத்த தானம் செய்ய விரும்புவோர் Jalan Tun Razak, PDN Donation Suite Midvalley Megamall அல்லது Suite Derma Darah Puspanitapuri, Presint 10 Putrajaya எனும் முகவரியில் உள்ள நிரந்தர இரத்த தான முகாம்களுக்கு வருகை புரியும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேல் விபரங்களுக்கு 03-2613 2777 என்ற தொலைபேசி எண்களிலும் தேசிய இரத்த மையத்தின் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.