ECONOMYHEALTHSELANGOR

சிலாங்கூர் அரசின் சிறப்பு உதவித் திட்டம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

ஷா ஆலம், ஜூன் 2– பொருளாதாரத் துறைகள் மூடப்பட்டதால் பாதிப்பை எதிர்நோக்கியிருக்கும் சிலாங்கூர் மக்களுக்கு உதவும் வகையில் சிறப்பு உதவித் திட்டத்தை மாநில அரசு அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளது.

மூன்றாம் கட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கத்தையொட்டி அறிவிக்கப்படும் இந்த உதவித் திட்டத்தில் எந்த தரப்பினரும் விடுபடாமலிருப்பது உறுதி செய்யப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மக்களுக்கு வழங்கவிருக்கும் உதவித் திட்டம் குறித்து தற்போது விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகிறோம். இதன் தொடர்பில் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர் பல்வேறு கட்ட விவாதங்களை நடத்த வேண்டியுள்ளது என்றார் அவர்.

இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் இன்று விவசாயத் பரிவுத் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இம்மாதம் முதல் தேதி தொடங்கி 14 நாட்களுக்கு சமூக, பொருளாதார நடவடிக்கைகளை மூடும் முதல் கட்டத் திட்டத்தை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது.

நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பு, மரண எண்ணிக்கை உயர்வு மற்றும் உருமாறிய நோய்த் தொற்று பரவல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்துள்ளது.

கடந்தாண்டு மார்ச் மாதம் நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்யப்பட்ட போது முன்களப் பணியாளர்கள், பட்டதாரி மாணவர்கள், சிறு வணிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு உதவும் வகையில் 12 கோடியே 78 லட்சத்து 8 0ஆயிரம் வெள்ளி மதிப்பில் சிலாங்கூர் பரிவுத் திட்டத்தை மாநில அரசு அறிவித்தது.

 


Pengarang :