காப்பார், ஜூலை 4– பண்டார் சுல்தான் சுலைமான், ஜாலான் சுல்தான் அலாடினில் சட்டவிரோத பந்தயத்தில் ஈடுபட்ட ஏழு பதின்ம வயதினர் உள்பட 31 பேர் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மாலை 5.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு மோட்டார் சைக்கிள் சோதனை நடவடிக்கையில் 13 முதல் 26 வயது வரையிலான அந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக வடகிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நுருள்ஹூடா முகமது சாலே கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் 16 வயது பெண்ணும் ஒருவராவார். இவர்கள் பொழுதுபோக்கிற்காக பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பணம் எதுவும் சம்பந்தப்படவில்லை என்று அவர் சொன்னார்.
இச்சோதனை நடவடிக்கையின் போது பலர் போலீசாரின் பிடியிலிருந்து தப்பியோட முயன்றதாகவும் எனினும், போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்த காரணத்தால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று தொடங்கிய கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுக்காக 76 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்ட வேளையில் 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் அவர் கூறினார்.