ஷா ஆலம், ஜூலை 14- எம்40 எனப்படும் நடுத்தர வருமானம் தரப்பினருக்காக சிலாங்கூர் அரசு வழங்கி வரும் இணைய சேவைக்கான கட்டணக் கழிவுத் திட்டத்திற்கு விரைந்து விண்ணப்பம் செய்யும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
ஆண்டுக்கு 120 வெள்ளி முதல் 360 வெள்ளி வரை சேமிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் இத்திட்டத்திற்கு இம்மாதம் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.
சிலாங்கூர் மாநில அரசின் இந்த இணையச் சேவை கட்டணக் கழிவு திட்டத்திற்கு இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக எஸ்.ஐ.எஸ்.எம்40 திட்ட நிர்வாகி முகமது இஸ்மாயில் கூறினார்.
மாதம் வெ.4,500 முதல் 10,000 வரை வருமானம் பெறும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வோர் மற்றும் வீட்டிலிருந்து கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றனர் என்று அவர் சொன்னார்.
இத்திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் https://www.sisn40.com.my/. எனும் அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பம் செய்ய முடியும்.