ஷா ஆலம், செப் 11- சுற்றுலா மையமான சிலாங்கூர் ஃபூருட் வேலி (எஸ்.எஃப்.வி.) வரும் புதன் கிழமை தொடங்கி வருகையாளர்களுக்கு மீண்டும் திறந்து விடப்படும்.
இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்கள் மட்டுமே இந்த பழ பள்ளத்தாக்கு சுற்றுலா மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்று சிலாங்கூ மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் கூறியது.
இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற பெற்றோர்கள் 17 வயதுக்கும் குறைவான தங்கள் பிள்ளைகளை இங்கு அழைத்து வரலாம். எனினும், அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அக்கழகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
கோவிட்-19 நோய்த் தொற்றை தடுக்கும் விதமாக எஸ்.எஃப்.வி. பணியாளர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றள்ளதாகவும் அவ்வறிக்கை குறிப்பிட்டது.
இந்த சுற்றுலா மையம் தொடர்பான தகவல்களைப் பெற விரும்புவோர் 016-6880792 என்ற எண்களில் அல்லது [email protected] அல்லது [email protected] மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
சுமார் 1,000 ஹெக்டர் பரப்பளவிலான இந்த மையத்தில் டுரியான், கொய்யா, பழா, மா, திராட்சை உள்ளிட்ட இருபது வகையான பழ மரங்கள் உள்ளன.
இது தவிர சுமார் 3,000 தேன் கூடுகளும் இங்கு உள்ளன. தீபகற்ப மலேசியாவில் தேன் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய மையமாக இந்த எஸ்.எஃப்.வி. தோட்டம் விளங்குகிறது.