கோலாலம்பூர், செப் 13- இன்று 14வது நாடாளுமன்றத்தின் நான்காம் தவணைக்கான முதலாவது கூட்டத்தில் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக விஷேச நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை(எஸ்.ஒ.பி.) தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்திற்கு வரும் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை பெற்று 14 நாட்களை கடந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதும் அந்த விதிமுறைகளில் அடங்கும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். மேலும், நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக ஆர்.டி- பி.சி.ஆர். வாயிலாக கோவிட்-19 பரிசோதனையை அவர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதே சமயம், நாடாளுமன்றத்திற்கு வரும் தினசரி கோவிட்-19 நோய்த் தொற்றிக் கண்டறிவதற்கு ஏதுவாக சுய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார். இதனிடையே, இம்மாதம் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் 1,801 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கோவிட்-19 பரிசோதனையில் 26 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார்.