கோல சிலாங்கூர் அக் 11- 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஹிஜ்ரா அறவாரியத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து 8 கோடி வெள்ளியாக நிலை நிறுத்தப்படும் என்று அந்த கடனுதவி அமைப்பு நம்புகிறது.
இந்த நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக சிலாங்கூரில் பொருளாதார நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் தொழில்முனைவோர் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை ஊக்குவிக்கவும் வாய்ப்பு கிட்டும் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
மந்திரி புசார் கூறியது போல் பொருளாரத் துறையில் சிலாங்கூர் விரைவாக முன்னேற வேண்டுமானால் அதிகமான தொழில்முனைவோர் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.
மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாக இருக்குமானால் பொருளாதாரமும் புத்துயிர் பெறும். ஹிஜ்ரா எட்டு கோடி வெள்ளியை புழக்கத்தில் விடும் பட்சத்தில் மாநிலத்தின் பொருளாதாரம் ஐந்து மடங்கு பெருகும் என்றார் அவர்.
சித்தம் தொழில்முனைவோர் ஒருவருக்கு கால்நடைத் தீவனத் தயாரிப்பு இயந்திரத்தை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் ஹிஜ்ரா தொழில்முனைவோர் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்து வருவர் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.