ஷா ஆலம், அக் 13- சுங்கை சிலாங்கூர் முதல் கட்ட நீர் சுத்திகரிப்பு மையத்தின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9.00 மணி தொடங்கி திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.
அப்பணிகள் இன்றிரவு 10.00 மணியளவில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் நீர் விநியோகம் நாளை மாலை 5.00 மணி தொடங்கி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனம் அறிக்கை வழி தெரிவித்தது.
வரும் 16 ஆம் தேதி இரவு 9.00 மணியளவில் நீர் விநியோகம் முழுமையாக வழக்க நிலைக்குத் திரும்பும் என்றும் அவ்வறிக்கை கூறியது.
பயனீட்டாளரின் இருப்பிடம் மற்றும் நீர் அழுத்தத்தைப் பொறுத்து நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும் நேரம் தீர்மானிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.
இந்த நீர் விநியோகத் தடையை எதிர்கொள்ள போதுமான அளவு நீரை சேகரித்து வைத்துக் கொள்ளும்படி பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், உலு சிலாங்கூர், கோல சிலாங்கூர், கோல லங்காட் மாவட்டங்களில் வசிப்போர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.