கோலாலம்பூர், அக் 30- கோவிட்-19 சுயப் பரிசோதனை கருவியின் உச்ச வரம்பு விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
அந்த உபகரணத்தின் விலை வரும் டிசம்பர் மாதம் குறைக்கப்படும் என்று முன்னதாக கூறியிருந்தேன். எனினும், அந்த நற்செய்திக்காக டிசம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டியதில்லை. வரும் நவம்பர் மாதத்திலேயே அந்த அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பொது மக்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் நலனையும் கருத்தில் கொண்டு அந்த கருவியின் விலை குறைப்பு வெளியிடப்படும் என அவர் சொன்னார்.
ஆண்டிஜென் ஆர்.டி.கே. விரைவு சோதனைக் கருவியின் மொத்த விலையை வெ.16,00 ஆகவும் சில்லரை விலையை வெ. 19.90 ஆகவும் நிர்ணயிக்கப்படுவதாக அரசாங்கம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.