ஷா ஆலம், நவ 10- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில் சமூக நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை மீட்டுக் கொள்ள அரசாங்கம் தயங்காது.
நாடு எண்டமிக் கட்டத்திற்கு மாறிய போது அரசாங்கம் ஒரே நிலையான வழிகாட்டு நெறிமுறையை (எஸ்.ஒ.பி.) பயன்படுத்தியது. அதுவே அது பொது சுகாதார நெறிமுறையாகும் என்று பிரதமர் துறை (சிறப்பு பணிகள்) துணையமைச்சர் டத்தோஸ்ரீ மஸ்துரா யாசிட் கூறினார்.
எனினும், கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அபரிமித உயர்வு கண்டால் தடுப்பு மற்றும் கண்காணிப்பு முறை உயர்ந்த பட்ச விழிப்பு நிலைக்கு கொண்டுச் செல்லப்படும் என்று அவர் சொன்னார்.
நோய்த் தாக்கம் அதிகம் இருக்கும் பட்சத்தில் சமூக நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படும். எனினும், பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படாது என்றார் அவர்.
மக்களவையில் இன்று தும்பாட் தொகுதி பாஸ் கட்சி உறுப்பினர் டத்தோ சே அப்துல்லா மாட் நாவி எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சு செய்யும் மதிப்பீட்டின் அடிப்படையில் பிரதமர் தலைமையில் கூடும் சிறப்பு செயல்குழு எஸ்.ஒ.பி. விதிமுறைகள் குறித்து முடிவு செய்யும் என அவர் மேலும் சொன்னார்.