கிள்ளான் ஜூலை 9 ;- கடந்த வாரம் நடைபெற்ற கிள்ளான் எக்மார் விடுதியில் ”மலேசிய இந்தியச் சமுதாயத்தின் மேம்பாடு வடிவமைத்தல்” என்ற கருத்தரங்கத்தின் பின் இன்று சனிக்கிழமை கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாண்புமிகு சார்லஸ் சந்தியாகோ, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர், சிலாங்கூர் மந்திரிபுசாரின் இந்தியச் சமூக விவகாரங்களுக்கான சிறப்பு உதவியாளர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், அரசு சார இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் கந்தசாமி மற்றும் கிள்ளான் நகராண்மைக்கழக உறுப்பினர்களும் கலந்துகொண்ட சந்திப்பில் விவாதிக்கப்பட்டவைகள் பின் வருமாறு.
1. இந்தியச் சமூகத்தின் சமூகப் பொருளாதாரத்தை உள்ளபடியே மேம்படுத்தும் வகையில் இந்தியச் சமூகச் செயலாக்கத் திட்டத்தின் (பிடிஎம்) அணுகுமுறைகளை மீளாய்வு செய்ய வேண்டும். தெராஜூ (TERAJU) போன்ற சிறப்புப் பிரிவு ஒன்றினை உருவாக்கி, மலேசிய இந்தியர்களுக்கு வணிகத் துறையில் சம வாய்ப்புகளை வழங்க வழிவகைகளைக் காண வேண்டும்.
2. தங்கள் கல்வியில் குறைவான தேர்ச்சி நிலையைக் கொண்ட பி60 குடும்பங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் 13 வயது முதல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் கல்விகளை மேற்கொள்வதைப் பிடிஎம்ஐ வலியுறுத்த வேண்டும்.
3. பி60 குடும்பத்தினர் 1.0% கும் குறைவானவர்கள் மட்டுமே வீட்டுடைமையாளர்களாக உள்ளதால், இவர்களுக்குப் பிபி ஆர் வீட்டுரிமைத் திட்டம் தேவை. இளைஞர் மேம்பாடு வீட்டுரிமைத் திட்டம், வாடகை வீட்டுடைமையாளர் திட்டம், என் முதல் வீட்டுடைமையாளர் திட்டம் போன்றவற்றில் 10% ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.
4. சிங்கப்பூர் – சிண்டா அமைப்பைப் போன்று தனித்து இயங்க வல்ல நிதியத் திட்டத்தைத் துவக்கி, அதற்கு, 100 மில்லியனைத் தொடக்க நிதியாக எதிர்வரும் 2023 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்க வேண்டும். வரவு செலவு அறிக்கையில் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கு முழு மானியத் தொகையினை வழங்குவதற்கும் வலியுறுத்த வேண்டும்.
5. மலேசிய இந்தியர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள், செயல்திட்டங்கள், வாய்ப்புகள், பயன்கள் போன்றவற்றின் செயலாக்கங்களின் பயன்விளைவைக் கண்காணிக்கும் வண்ணம் திறமையான, பொறுப்புடைய, வெளிப்படையான ஓர் அமைப்பு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் இன்றைய விவாதங்களில் வலியுறுத்தப்பட்டது.