மலாக்கா, நவ 26 – புதிய அரசாங்கத்தின் தலைமையின் கீழ் ஆசியான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு வரும் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என டூரிசம் மலேசியா எதிர்பார்க்கிறது. உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவித்தல் மற்றும் சர்வதேச நிலையில் பிரசார திட்டங்களை நடத்துதல் போன்ற முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் தொடரப்படும் என்று டூரிசம் மலேசியாவின் உள்நாட்டு மற்றும் நிகழ்வுப் பிரிவின் மூத்த இயக்குனர் இஸ்கந்தர் மிர்சா முகமட் யூசோப் கூறினார்.
அதே நேரத்தில், நாங்கள் தொடர்ந்து கண்காட்சிகளை ஏற்பாடு செய்வோம்.
மலேசியாவிற்கு கேஎல்எம் மற்றும் துருக்கிய ஏர்லைன்ஸ் போன்ற சர்வதேச விமானங்கள் மீண்டும் பயணத்தை தொடங்குவது சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் சொன்னார்.
இன்று இங்குள்ள பேரங்காடியில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான சுற்றுலா ஊக்குவிப்பு கண்காட்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதை கூறினார். இதற்கிடையில், இன்று நடைபெறும் இந்த ஊக்குவிப்பு கண்காட்சியில் 10 லட்சம் வெள்ளிக்கும் அதிகமாக வருமானம் கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுவதாக டூரிசம் மலேசியாவின் துணை திட்டமிடல் இயக்குநருமான இஸ்கந்தர் மிர்சா தெரிவித்தார்.