NATIONAL

மாற்றுத் திறனாளிச் சிறுவனை அடித்துக் கொன்று சடலத்தைப் புதருக்குள் வீசினான்- தாயின் காதலனின் அடாதச் செயல்

ஷா ஆலம், ஜன 6- அடித்துக் கொல்லப்பட்டு புதருக்குள் வீசப்பட்டதாக
நம்பப்படும் மாற்றுத் திறனாளிச் சிறுவனின் உடலை போலீசார்
மீட்டுள்ளனர். இச்சம்பவம் பாவ், கம்போங் கிராஞ்சியில் நிகழ்ந்துள்ளது.

தன் மகன் காணப்படாதது தொடர்பில் அந்த ஆறு வயது சிறுவனின்
தாயார் கடந்த மாதம் 21ஆம் தேதி போலீசில் புகார் செய்வதற்கு ஐந்து
நாட்களுக்கு முன்னர் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என
சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் 35 வயதுடைய நபரை தாங்கள் நேற்று முன்தினம்
கைது செய்ததாகவும் அவ்வாடவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில்
அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் பாவ் மாவட்ட போலீஸ்
தலைவர் சூப்ரிண்டெண்டன் போகே ங்காயோன் கூறினார்.

தன் காதலியின் மூத்த மகனை உயிர் போகும்வரை அடித்து சடலத்தைப்
புதருக்குள் வீசியதாக அவ்வாடவன் விசாரணையின் போது
தெரிவித்துள்ளான் என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த ஆடவனின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு நேற்று மாலை 6.45
மணியளவில் விரைந்த போலீசார் கையில் பொம்மையை
இறுகப்பற்றியப்படி காணப்பட்ட அந்த சிறுவனின் உடலை கைப்பற்றியதாக
அவர் சொன்னார்.

இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ்
விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :