NATIONAL

துப்பாக்கியைத் தொடுவதற்கு நண்பரை அனுமதித்தப் போலீஸ்காரர் மீது விசாரணை

ஜொகூர் பாரு, ஜன 13- பணியின் போது தன்வசம் இருந்த துப்பாக்கியைத்
தன் நண்பர் தொடுவதற்கு அனுமதித்ததாக நம்பப்படும் தாமான் ஜொகூர்
ஜெயா போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் மீது
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த புதன்கிழமை விடிற்காலை 2.43 மணியளவில் நிகழ்ந்ததாக
நம்பப்படும் இச்சம்பவம் தொடர்பான புகைப்படம் டிவிட்டர் பதிவின் மூலம்
பகிரப்பட்டதாக ஸ்ரீ அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன்
முகமது சோஹாய்மி இஷாக் கூறினார்.

சீருடை அணிந்த போலீஸ்காரர் ஒருவர் சிகிரெட் பிடித்தபடி நின்றிருக்க
அவரின் அருகில் பொது மக்களில் ஒருவர் எச்.கே.-எம்.பி.-5 ரக
துப்பாக்கியை ஏந்தியிருப்பதை அந்த புகைப்படம் சித்தரிப்பதாக அவர்
சொன்னார்.

சம்பந்தப்பட்ட அந்த போலீஸ்காரர் தாமான் ஜோகூர் ஜெயா போலீஸ்
நிலையத்தில் பணியாற்றுபவர் என்பது தொடக்ககட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளதாகக் கூறிய அவர், போலீஸ் நிலையத்தின் முன்புறம்
நிகழ்ந்த இந்த சம்பவத்தைப் போலீஸ்காரரின் நண்பர் படம் பிடித்துள்ளார்
என்றார்.

இச்சம்பவம் நிகழ்ந்த போது அந்த போலீஸ்காரர் போலீஸ் நிலையத்தின்
பாதுகாப்பு சாவடியில் பணியில் இருந்துள்ளார். இச்சம்பவத்தில்
சம்பந்தப்பட்ட மூவரும் 25 வயதுடையவர்கள் என்று அவர் தெரிவித்தார்.

ஞாபகார்த்ததின் அடையாளமாக இந்த படத்தை அவர்கள் எடுத்துள்ளனர்.
எனினும் அவர்களில் ஒருவர் அதனை சமூக ஊடகங்களில் பதிவேற்றம்
செய்துள்ளார் என முகமது சோஹாய்மி தெரிவித்தார்.


Pengarang :