ஷா ஆலம், ஜன 31- வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் தைப்பூச விழாவை முன்னிட்டு பத்து மலை, ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படும் வேளையில் மாநில அரசின் ஏற்பாட்டில் ஆலய வளாகத்தில் பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த நிகழ்வுகளில் ஒரு பகுதியாக வரும் பிப்ரவரி 4ஆம் தேதி மாலை 6.00 மணி முதல் நள்ளிரவு வரை சுமார் 10,000 பக்தர்களுக்கு இலவசமாக உணவு மற்றும் பானங்கள் வழங்கப்படும் என்று சமூக பொருளாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.
மேலும், பத்து கேவ்ஸ் தொழிற்பேட்டை பகுதியில் அன்றிரவு நடைபெறும் மாநில அரசு நிலையிலான சிறப்பு நிகழ்வில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து கொள்வார் என அவர் சொன்னார்.
பல்வேறு, கலை,கலாசாரம் மற்றும் சமயம் சார்ந்த படைப்புகளை உள்ளடக்கிய இந்த நிகழ்வில் 10 முதல் 30 ஆலயங்களின் பிரதிநிதிகளிடம் மந்திரி புசார் மானியங்களை வழங்குவார் என அவர் குறிப்பிட்டார்.
தைப்பூச விழாவுக்காக பத்துமலை வரும் பக்தர்கள் முகக் கவரி அணிந்திருப்பதை உறுதி செய்யும்படியும் கணபதிராவ் கேட்டுக் கொண்டார்.
தைப்பூசத்தின் போது ஆலய வளாகத்தில் சைவ உணவுகள் மட்டும் விற்பனை செய்யப்படுவதை ஆலய நிர்வாகத்தினர் உறுதி செய்வர். அதே சமயம் ஆலயத்திற்கு வெளியே விற்கப்படும் உணவுகள் யாவும் சைவமாக இருப்பதை உறுதி செய்யும் பணியில் ஊராட்சி மன்றத் தரப்பினர் ஈடுபடுவர் என்றார் அவர்.
தைப்பூசத்தின் போது பத்துமலை வளாகத்தில் மதுபானங்கள் அறவே அனுமதிக்கப்படாது. இந்த உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்யும் தரப்பினர் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பர் என்றும் அவர் தெரிவித்தார்.