கோலாலம்பூர், பிப் 4- அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியிலிருந்து கண்ணாடி போத்தலை சாலையை நோக்கி எறிந்த ஆடவரை அடையாளம் கண்டுள்ள போலீஸார் அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் இங்குள்ள கம்போங் பாரு, ஜாலான் சென்டானாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அண்மையில் நிகழ்ந்தது சோதனையில் கண்டறியப்பட்டது என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் டெலிஹான் யாஹ்யா கூறினார்.
அந்த நபரை மாவட்ட குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் அடையாளம் கண்டுள்ளதோடு அவரை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் சொன்னார்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததுதொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 286 வது பிரிவின் கீழ் இச்சம்பவம் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
எனினும், இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து இதுவரை எந்த புகாரையும் தாங்கள் பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆடவர் ஒருவர் சாலையை நோக்கி கண்ணாடி போத்தலை விட்டெறியும் காணொளி அண்மையில் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தது.