ஷா ஆலம், பிப் 10- செல்கேர் கிளினிக்குகளில் கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசிகளை இலவசமாக பெற்றுக் கொள்ளும்படி சிலாங்கூர் மாநில மக்கள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.
செல்கேர் கிளினிக்குகளுக்கு நேரடியாக வருவதன் மூலம் அல்லது வருகைக்கான முன்பதிவு வாயிலாக இந்த தடுப்பூசியை பெறலாம் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
ஊக்கத் தடுப்பூசியைப் பெறுவது நமது அனைவரின் கடமையாகும். கோவிட்-19 நோய்த் தொற்றை தடுக்காவிட்டாலும் கடுமையான தாக்கம் ஏற்படுவதிலிருந்து அந்த தடுப்பூசியால் தடுக்க இயலும் என்று அவர் சொன்னார்.
பொது மக்கள் அருகிலுள்ள செல்கேர் கிளினிக்குகளுக்கு நேரில் சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம். இல்லையேல் வருகைக்கான முன் பதிவு பெற்று குறிப்பிட்ட நாளில் சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர்.
இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசி இயக்கத்தை சேர்ப்பது குறித்தும் தாங்கள் பரிசீலித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிர பாதிப்பைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக செல்கேர் கிளினிக்குகளுக்கு நேரில் சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொது மக்களை கேட்டுக் கொண்டார்.