அலோர் ஸ்டார், பிப் 27: நேற்று கூலிமில் உள்ள சுங்கை சேடிம் நீர்வீழ்ச்சி பகுதியில், நீரில் மூழ்கிய தனது சகோதரரைக் காப்பாற்ற முயன்ற மூத்தச் சகோதரரின் செயல் சோகத்தில் முடிந்தது.
இதுகுறித்து கூலிம் மாவட்டக் காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் முகமட் ரெட்சுவான் சலே கூறுகையில், பாதிக்கப்பட்ட முகமட் ஷாபிக் யூசோப் (33) மற்றும் அவரது சகோதரர் முகமட் சியாஸ்வான் (25) ஆகியோர் மாலை 3.20 மணியளவில் நீர்வீழ்ச்சியில் தங்கள் மூன்று நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
“குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று தண்ணீர் சுழன்று அனைவரையும் மூழ்கடித்தது. அவர்களில் நால்வர் தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர். ஆனால் முகமட் சியாஸ்வான் காணாமல் போனார் மற்றும் நீரில் மூழ்கியதாகச் சந்தேகிக்கப்பட்டது.
“முகமட் ஷாபிக் யூசோப் தனது சகோததரைக் காப்பாற்ற மீண்டும் ஆற்றில் குதித்தார். ஆனால், பரிதாபமாக அவ்விருவரும் நீரில் மூழ்கி இறந்தனர், ”என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
“இரண்டு சகோதரர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காகக் கூலிம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மேலும் இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டது,” என்று அவர் கூறினார்.
– பெர்னாமா