புத்ரஜெயா எம்.ஆர்.டி. இரயில் தடம் மார்ச் 16ஆம் தேதி போக்குவரத்துக்கு திறக்கப்படும்

கோலாலம்பூர்,  மார்ச் 4- புத்ராஜெயாவுக்கான இரண்டாம் கட்ட எம்.ஆர்.டி. இரயில் தடம் வரும் மார்ச் மாதம் 16ஆம் தேதி போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

எம்.ஆர்.டி.கார்ப்ரேஷன், பிராசரானா மலேசிய பெர்ஹாட் (பிராசரானா) மற்றும் தரைப் பொது போக்குவரத்து நிறுவனம் ஆகிய தரப்பினருடன் நேற்று நடத்தப்பட்ட அமைச்சரவைக்குப் பிந்தைய கூட்டத்தில் இதன் தொடர்பில் முடிவெடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

புத்ரா ஜெயா இரண்டாம் கட்டத் தடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்த முறையிலான பயணம் சாதகமான முடிவுகளைத் தந்துள்ளதோடு அனைத்து சோதனை முடிவுகள் குறித்தும் அமைச்சு மனநிறைவு கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்த இரயில் சேவையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மார்ச் 16ஆம் தேதி  மாலை 3.00 மணிக்கு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார் என்று பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

அதிகமானோர் பொது போக்குவரத்து சேவையைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்தின் இந்த முயற்சி பெரிதும் துணை புரியும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

 


Pengarang :