ஷா ஆலம், மார்ச் 8- ஜப்பான், ஒசாகாவில் பயிலும் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று சந்திப்பு நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது எழுத்தாளர ஜே.எம். குல்லிக் எழுதிய 1766-1939 சிலாங்கூர் வரலாற்றுப் புத்தகத்தை அவர் அம்மாணவர்களுக்குப் பரிசாக வழங்கினார். வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் அந்நாடுகளில் பயிலும் சிலாங்கூர் மாநில மாணவர்களைச் சந்திப்பதை முடிந்தவரை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறேன் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.
ஜப்பானில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் சிலாங்கூரில் அமல்படுத்தக்கூடிய புதிய ஆலோசனைகளையும் வழங்கிய பூச்சோங்கைச் சேர்ந்த ஜூல், தஞ்சோங் காராங்கைச் சேர்ந்த ஃபாஹ்மி, ஷா ஆலமைச் சேர்ந்த ஹஸிஹாத்துல் மற்றும் கோம்பாக்கைச் சேர்ந்த ஜஹிரா ஆகியோரின் கருத்துகள் என்னைப் பெரிதும் கவர்ந்தன என்றார் அவர்.
வெளிநாடுகளில் பயிலும் சிலாங்கூர் மாநில மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வாய்ப்பு, வசதிகளையும் மாநில அரசு தயார் செய்து தரும் என்ற உத்தரவாதத்தையும் தாம் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
கல்வியை முடித்து திரும்பியவுடன் மாநிலத்திற்கு உரிய பங்களிப்பை வழங்குவதற்கு ஏதுவாக வெளிநாடுகளில் பயிலும் போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி புதிய அனுபவங்களைப் பெறும்படி அம்மாணவர்களைத் தாம் கேட்டுக் கொண்டதாக அவர் மேலும் சொன்னார்.