ஷா ஆலம், மார்ச் 17– இணைய வர்த்தகப் பதிவு மற்றும் லைசென்ஸ் வழிகாட்டி முறையை அமல் செய்த முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது.
குடியிருப்பு, வர்த்தக மற்றும் தொழிலியல் பேட்டைகளில் வர்த்தகத்தை மேற்கொள்ளும் வணிகர்களை இலக்காகக் கொண்டு கடந்தாண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி இந்த வழிகாட்டி அமல்படுத்தப்பட்டதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
எனினும், கடந்தாண்டு 110 பதிவுகள் மட்டுமே பெறப்பட்ட வேளையில் இவ்வாண்டில் இதுவரை 27 பதிவுகள் பெறப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.
இணைய வர்த்தக லைசென்ஸ முறை குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் நோக்கில் இதன் தொடர்பான அறிமுக விழா நிகழ்வு நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இங்குள்ள அரச தலைமைச் செயலகத்தின் அனெக்ஸ் கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற சிலாங்கூர் இணைய வர்த்தக பதிவு மற்றும் லைசென்ஸ் வழிகாட்டியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த இணைய லைசென்ஸ் முறையை அமல்படுத்துவதன் மூலம் வணிகர்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவு படுத்துவதற்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதற்கான வழிகாட்டிகள் உருவாக்கப்படும் பட்சத்தில் அதுசார்ந்த லைசென்ஸ்களை சம்பந்தப்பட்ட வணிகர்கள் ஊராட்சி மன்றங்களிடமிருந்து பெற முடியும் என்றும் அவர் கூறினார்.