SELANGOR

பெஸ்தாரி ஜெயாவில் வசதி குறைந்த 25 இந்திய மாணவர்களுக்குப் பள்ளி உதவிப் பொருள்கள் விநியோகம்

கோல சிலாங்கூர், மார்ச் 22- இங்குள்ள பெஸ்தாரி ஜெயாவிலுள்ள இரு பள்ளிகளில் பயிலும் 25 இந்திய மாணவர்களுக்கு “மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம்“ திட்டத்தின் கீழ் பள்ளி உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் எம்.சிவபாலன் மற்றும் மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி மற்றும் சுல்தான் சுலைமான் ஷா இடைநிலைப்பள்ளியில் பயிலும் குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த
உதவிப் பொருள்களைப் பெற்றனர்.

இந்த 25 மாணவர்களுக்கும் தலா 150 வெள்ளி செலவில் இரு ஜோடி பள்ளிச் சீருடைகள், புத்தகப் பை மற்றும் காலணிகள் வழங்கப்பட்டதாகச் சிவபாலன் கூறினார்.

பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இந்த உதவித் திட்டத்தைத் தாங்கள் அமல்படுத்தியதாக அவர் சொன்னார்.

இந்த உதவி சிறியதாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட மாணவர்களுடைய குடும்பங்களின் நிதிச்சுமை ஓரளவு குறைக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :