SELANGOR

ஷா ஆலம், செக்சன் 25, ஜாலான் ஜித்துவில் பழுதடைந்த சாலை சீரமைக்கப்ப்பட்டது

ஷா ஆலம், ஏப் 3- மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து
காணப்பட்ட இங்குள்ள செக்சன் 25, ஜாலான் ஜித்து சாலை மாநகர் மன்ற
உறுப்பினரின் முயற்சியால் கடந்த சனிக்கிழமை செப்பனிடப்பட்டது.

தாமான் ஸ்ரீ மூடா மற்றும் புக்கிட் கெமுனிங்கை இணைக்கும் இந்த
சாலையின் சுமார் 50 மீட்டர் பகுதி கடுமையாகச் சேதமடைந்து குண்டும்
குழியுமாக காணப்பட்டது தொடர்பில் பொது மக்களிடமிருந்து தாங்கள்
தொடர்ச்சியாக புகாரைப் பெற்று வந்ததாக மாநகர் மன்ற உறுப்பினர் ராமு
நடராஜன் கூறினார்.

இந்த சாலைப் பிரச்சனை தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் 26ஆம்
தேதியே தாங்கள் சிலாங்கூர் பொதுப்பணி இலாகாவிடம் புகார் அளித்த
போதிலும் பல்வேறு நிர்வாக நடைமுறைகள் மற்றும் ஆய்வுக்குப் பின்னர்
கடந்த சனிக்கிழமை அச்சாலையைச் செப்பனிடும் பணி
மேற்கொள்ளப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

இச்சாலையைச் செப்பனிடும் பணி விரைந்து மேற்கொள்ளப்படுவதை
உறுதி செய்வதில் உரிய பங்கினை ஆற்றிய கோத்தா கெமுனிங்
சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான
வீ.கணபதிராவ் மற்றும் தங்கள் கோரிக்கையை ஏற்று சாலையைச்
சீரமைத்து தந்த மாநில பொதுப்பணி இலாகாவுக்கு தாம் நன்றி
தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :